சொல் இலக்கணம்
(1) ஆ, வீடு, வண்டு - இவற்றுள் ஒவ்வொன்றும் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லாதலால் பெயர்ச் சொல் எனப்படும்.
(2) கண்டான், கண்டு, கண்ட - இவ்வாறு ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
1. திணை
உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான்.
எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது.
மக்கள், தேவர், நரகர் - உயர்திணை.
பிற உயிர் உள்ளனவும் இல்லனவும் - அஃறிணை.
2. பால்
பால் - பிரிவு:
கண்ணன், பாண்டியன், பையன் - ஆண்பால்.
கண்ணகி, அரசி, பெண் - பெண்பால்.
அரசர்கள், மக்கள், பெண்கள் - பலர்பால்.
இம்மூன்று பால்களும் உயர்திணையைச் சேர்ந்தவை.
பசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம் - ஒன்றன் பால்.
பசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள் - பலவின்பால்.
இவை இரண்டும் அஃறிணைக்கு உரிவை.
3. எண்
எண் - பொருள்களின் எண்ணிக்கை.
ஒன்றைக் குறிப்பது ஒருமை: ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.
கந்தன், கற்பகம், மாடு - ஒருமை எண்.
பெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை எண்.
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை எண்.
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை எண்.
4. இடம்
நான் நேற்று ஆசிரியரைப் பற்றிச் சொன்னபோது நீ மகிழ்ச்சி அடைந்தாய் - இந்த வாக்கியத்தில்,
நான் என்பது பேசுவோனைக் குறிக்கின்றது.
நீ என்பது முன்னின்று கேட்பவனைக் குறிக்கின்றது.
ஆசிரியரை என்பது பேசப்படுபவரைக் குறிக்கின்றது.
இம்மூவர் இடங்களும் முறையே (1) தன்மை இடம் (2) முன்னிலை இடம் (3)
படர்க்கை இடம் என்று பெயர் பெறும்.
(1) நான் - தன்மையிடம்.
(2) நீ - முன்னிலையிடம்.
(3) ஆசிரியர் - படர்க்கையிடம்.
நான் - தன்மை ஒருமை.
நாம், நாங்கள் - தன்மைப் பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலைப் பன்மை.
அவன், அவள், அது - படர்க்கை ஒருமை.
அவர்கள், அவை - படர்க்கைப் பன்மை.
நான், யான் - தன்மை ஒருமை.
நாம், யாம், நாங்கள் - தன்மை பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலை பன்மை.
தான் - படர்க்கை ஒருமை.
தாம் - படர்க்கை பன்மை.
நான் சொல்லுவது தனக்குத் தெரியும்.
தான் சொன்னதைக் கேட்டீர்களா?
தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்களுக்குப் பதிலாக அவன், அவள், அவர்
என வழங்குதலே இன்றுள்ள பெரு வழக்காகும்.
5. வேற்றுமை
கண்ணன் - இஃது ஒரு பெயர்ச்சொல். இச்சொல் கண்ணனை (ஐ), கண்ணனால் (ஆல்), கண்ணனுக்கு (கு), கண்ணனில் (இல்), கண்ணனது (அது), கண்ணனிடம் (இடம்), கண்ணா! வருக - எனப் பலவாறு பொருளில் வேறுபட்டு வருதலைக் காணலாம். இவ்வேறுபாடு வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமைகளை உண்டாக்கும் ஐ முதலிய உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படும்.
வேற்றுமை எட்டு வகைப்படும்.
கண்ணன் வந்தான் - இயல்பான பெயர்; முதல் வேற்றுமை.
கண்ணனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு.
கண்ணனால் அழைக்கப்பட்டேன் - ஆல்
கண்ணனோடு சென்றேன் - ஓடு
கண்ணனுடன் வந்தேன் - உடன்
மூன்றாம் வேற்றுமை.
ஆல், ஓடு, உடன் - மூன்றாம் வேற்றுமை உருபுகள்.
கண்ணனுக்குத் திருமணம் - நான்காம் வேற்றுமை.
கு - நான்காம் வேற்றுமை உருபு.
கண்ணனில் கந்தன் பெரியவன் - இல்
கண்ணன் வீட்டினின்று சென்றான் - நின்று
கண்ணன் மரத்திலிருந்து இறங்கினான் - இருந்து
ஐந்தாம் வேற்றுமை உருபு.
இல், நின்று, இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள்.
இது கண்ணனது பை - அது
இவை கண்ணனுடைய பைகள் - உடைய - ஆறாம் வேற்றுமை.
அது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள்.
பையில் பணம் இருக்கிறது - இல்
கண்ணனிடம் கத்தி இருக்கிறது - இடம்
வீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர் - கண்
இல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள்.
பெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும். முதல் வேற்றுமை விளி வேற்றுமை கண்ணன் கண்ணா! - மகன் மகனே! - ஈற்றில் ஏகாரம் மிக்கது. மக்கள் மக்காள் - ஈற்றயல் நீண்டது. முருகன் முருக! - பிள்ளை பிள்ளாய் ! - ஈற்று `ஐ' - `ஆய்' எனத் திரிந்தது.
6. ஆகு பெயர்
மயில் - ஒரு பறவையின் பெயர்.
மயில் வந்தாள் - மயில் போன்ற (சாயலையுடைய) பெண் வந்தாள். இவ்வாறு ஒன்றன் பெயர் அதனோடு தொட்புடைய வேறொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகிவரின், அஃது ஆகுபெயர் எனப்படும்.
அவன் சிறப்பை மதுரை பாராட்டுகிறது. இங்கு `மதுரை' என்னும் இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள மக்களுக்கு ஆகி வந்தது. எனவே, `மதுரை', என்பது ஆகு பெயர். சித்திரை வந்தான் - `சித்திரை' என்னும் மாதத்தின் பெயர் அம்மாதத்தில் பிறந்த ஒருவனுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, `சித்திரை' என்பதும் ஆகுபெயர். வீட்டிற்கு வெள்ளையடித்தான் - `வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர் அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. எனவே, `வெள்ளை' என்பதும் ஆகுபெயர்.
ஒரு `படி' வாங்கினேன் - `படி' என்னும் முகத்தலளவைப் பெயர், அந்த அளவுடைய ஒரு பொருளுக்கு ஆகி வந்தது. எனவே, `படி' என்பதும் ஆகுபெயர்.
7.தொழிற் பெயர்
வா, போ, நில், செய் - என்றாற் போல வருபவை வினை செய்ய ஏவப் பயன்படும்
சொற்களாகும். இவை வினைச் சொற்கள் எனப்படும். இவை ஏவல் வினைமுற்றுக்கள்
என்றும் சொல்லப்படும், இவற்றிலிருந்து,
வந்தான், வருகிறான், வருகிறாள், வருவார் எனவும்,
வந்து, போய், நின்று, செய்து எனவும்,
வந்த, போன, நின்ற, செய்த எனவும்,
வருதல், போதல், நிற்றல், செய்தல் எனவும் சொற்கள் பலவாறு வளர்ச்சியடையும்
இவற்றுள் முதல் மூன்று வகைப்பட்டவையும் வினைச்சொற்களாகும். வருதல், போதல், நிற்றல், செய்தல் என்பன வருதலாகிய தொழில், போதலாகிய தொழில், நிற்றலாகிய தொழில், செய்தலாகிய தொழில் எனத் தொழிலுக்குப் பெயராகி வருதலின் தொழிற் பெயர்கள் எனப்படும்.
தொழிற் பெயர் விகுதிகள்:
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, தி, சி, காடு, பாடு, மதி, து, உ, மை
முதலியன.
செய் + தல் - செய்தல். இவற்றுள் `செய்' என்பது இச்சொல் வளர்ச்சிக்கு உயிர் நாடியாய் முன் நிற்பதால் பகுதி எனப்படும்.
`தல்' என்பது சொல்லின் கடைசியில் நிற்பதால் விகுதி, எனப்படும். செய்- பகுதி; தல் தொழிற் பெயர் விகுதி, ஓடுதல், அடல், ஓட்டம், நடத்தை, வருகை, தீர்வை, போக்கு, வாய்ப்பு, மறதி, முயற்சி, சாக்காடு, மெய்ப்பாடு, ஏற்றுமதி, நடந்தது, வரவு, நடந்தமை - இவை தொழிற் பெயர்கள்.
8. வினைமுற்று
படித்தான், படித்து, படித்த, - என்பன வினைச்சொற்கள் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? இவற்றில் பொருள் முற்றி (முடிந்து) நிற்கும் வினைச்சொல் எது? படித்தான் என்பதே வினை முற்றி நிற்பது. ஆதலால் படித்தான் என்பது வினைமுற்று எனப்படும். படித்து, படித்த என்பவை முற்றுப் பெறாத வினைச் சொற்கள், இவை (1) படித்து (வந்தான்) என வேறொரு வினைச் சொல்லையும், (2) படித்த (பையன்) என ஒரு பெயர்ச் சொல்லையும் தழுவி நிற்க வேண்டுவனவாக இருக்கின்றன. இவற்றுள் வினையைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் வினையெச்சம் எனப்படும். பெயரைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரெச்சம் எனப்படும்.
படித்தான், படிக்கின்றான், படிப்பான் - வினைமுற்று.
படித்து, நடந்து, படிக்க (வந்தான்) - வினையெச்சம்.
படித்த, படிக்கின்ற, படிக்கும் (பையன்) - பெயரெச்சம்.
9. மூன்று காலங்கள்
கம்பர் இராமாயணம் பாடினார்.
பையன் பாடம் படிக்கிறான்.
குழந்தை பால் குடிக்கும்.
பாடினார், படிக்கிறான், குடிக்கும் - இவற்றுள் ஒவ்வொன்றும் எந்தக் கால
நிகழ்ச்சியை உணர்த்துகின்றது?
பாடினார் என்பது செயல் நடந்துவிட்ட (இறந்த) காலத்தையும்.
படிக்கிறான் என்பது செயல் இப்பொழுது நிகழ்கின்ற காலத்தையும்,
குடிக்கும் என்பது செயல் இனி நடைபெற இருக்கும் எதிர்காலத்தையும்
காட்டுகின்றன அல்லவா? இவை மூன்றும் முறையே,
இறந்த கால வினைமுற்று
நிகழ்கால வினைமுற்று
எதிர்கால வினைமுற்று
எனப்படும்.
பாடினார் - இறந்தகால வினைமுற்று.
படிக்கிறான் - நிகழ்கால வினைமுற்று.
குடிக்கும் - எதிர்கால வினைமுற்று.
செய்தான் - செய் + த் + ஆன்
செய்கிறான் - செய் + கிறு + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
இம்மூன்று சொற்களும் வெவ்வேறு காலங்களை உணர்த்துகின்றன என்பதை நீங்களே உணரலாம். இங்ஙனம் தனித்தனிக் காலத்தை உணர்த்தும் உறுப்பு ஒவ்வொரு சொல்லிலும் எங்கே இருக்கிறது? மூன்றிலும் உள்ள `செய்' என்னும் முதல் உறுப்புப் பகுதி என்பதும், கடைசி உறுப்பு விகுதி என்பதும் உங்களுக்குத் தெரியும். பகுதி தொழிலை உணர்த்துகிறது; விகுதி தொழில் செய்யும் கருத்தாவை உணர்த்துகிறது; இவை இரண்டும் போக ஒவ்வொன்றிலும் எஞ்சியிருக்கும் உறுப்பே ஒவ்வொரு காலத்தை உணர்த்துகின்றது.
த் - இறந்த (செயல் நடந்த) காலத்தையும்
கிறு - நிகழ் (செயல் நிகழ்கின்ற) காலத்தையும்
வ் - எதிர் (செயல் இனி நடைபெறும்) காலத்தையும் உணர்த்துகின்றன. இவை
இவ்வாறு சொல்லின் இடையில் நிற்பதால் இடைநிலைகள் என்று பெயர் பெறும்; இவை
காலம் காட்டுவதால் காலம் காட்டும் இடைநிலைகள் என்று சொல்லப்படும்.
செய்தான் - செய் + த் + ஆன்
உண்டான் - உண் + ட் + ஆன்
கற்றான் - கல் + ற் + ஆன்
விரும்பினான் - விரும்பு + இன் + ஆன்.
இவை நான்கும் இறந்த காலத்தைக் குறிக்கும் வினைச்சொற்கள். ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன அல்லவா? இவை இறந்த கால இடைநிலைகள். த், ட், ற், இன் - இறந்த கால இடைநிலைகள்.
உண்கிறான் - உண் + கிறு + ஆன்
உண்கின்றான் - உண் + கின்று + ஆன்
உண்ணாநின்றான் - உண் + ஆநின்று + ஆன்
இவை மூன்றும் நிகழ்காலத்தைக் காட்டுகின்றன ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக
இருக்கின்றன. இவை நிகழ்கால இடைநிலைகள்.
கிறு, கின்று, ஆநின்று - நிகழ்கால இடைநிலைகள்.
உண்பான் + ப் + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
இவையிரண்டும் எதிர்காலத்தை உணர்த்துகின்றன; ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன இவை எதிர்கால இடைநிலைகள். ப், வ் - எதிர்கால இடைநிலைகள்.
வினைமுற்றுக்களின் இடைநிலைகள் இருந்து காலம் காட்டுவது போலவே வினையெச்சத்திலும் பெயரெச்சத்திலும் இவ்விடைநிலைகள் நின்று காலம் காட்டும்.
உண்டு (வந்தேன்) - உண் + ட் + உ.
செய்து - செய் + த் + உ.
கற்று - கல் + ற் + உ.
இவை இறந்தகால இடைநிலைகளைக் கொண்ட வினையெச்சங்கள்; ஆதலால் இவை இறந்தகால வினையெச்சங்கள் எனப்படும்.
படிக்கிற (பையன்) - படி + கிறு + அ
மேய்கின்ற (பசு) - மேய் + கின்று + அ.
இவை நிகழ்கால இடைநிலைகளைக் கொண்ட பெயரெச்சங்கள்; ஆதலால் இவை நிகழ்காலப் பெயரெச்சங்கள் எனப்படும்.
10. வினையாலணையும் பெயர்
1.> மதுரை மாரியப்ப சுவாமி பாடினார் - இவ்வாக்கியத்தில் `பாடினார்' என்பது வினைமுற்று.
இவர் பாடிய மறுநாள் தெரு வழியே சென்றார். இவரைக் கண்ட மக்கள், `நேற்றுப் பாடினவர் இதோ போகிறார்' என்றனர். பாடியவரது இயற்பெயர் மாரியப்ப சுவாமி என்பது. ஆனால் மக்கள் அதைச் சொல்லாமல், `பாடினவர்' என்னும் புதிய பெயரை இட்டு வழங்கினர். இப்பெயர் இவரை இவர் செய்த வினையால் அணைந்த பெயராகும். பாடுதலாகிய வினையைச் செய்ததனால் பாடினவர்குத் தாம் செய்த வினையால் அணையும் பெயர், விணையாலணையும் பெயர் எனப்படும். வினைமுற்று வினையாலணையும் பெயர் ஓடினார் ஓடினவர் பாடுகிறான் பாடுகிறவன் செய்வான் செய்பவன் படித்தான் படித்தவன்இவ்வினையாலணையும் பெயர்கள் செய்பவன், செய்பவனை, செய்பவனால், செய்பவனுக்கு, செய்பவனில், செய்பவனது, செய்பவனிடம், செய்பவனே! என வேற்றுமை உருபுகளை ஏற்றுவரும்
2>. தொழிற் பெயர் வினையாலணையும் பெயர்: வேறுபாடுகள். தொழிற் பெயர் வினையாலணையும் பெயர் வருதல் - தொழிற்பெயர் வந்தவன் - வினையாலணையும் பெயர்
1. தொழிலுக்குப் பெயராய் வரும் 1. தொழிலைச் செய்த பொருளுக்கே பெயராய் வரும்.
2. படர்க்கை இடற்திற்கே உரியது. மூவிடத்திற்கும் உரியது.
3. காலம் காட்டாது. 3. முக்காலத்தையும் காட்டும். வந்தானை - இறந்தகாலம்
வருகின்றவனை - நிகழ்காலம் வருவானை - எதிர்காலம். வினையாலணையும் பெயர் முக்காலமும் காட்டும்.
11. ஐம்பாற் பெயர் விகுதிகள்
1. ஆண்பால் பெயர் விகுதி
(1) குழையன் அன்
(2) குழையான் ஆன்
(3) வடமன் மன்
(4) கோமான் மான்
(5) பிறன் ன்
அன், ஆன், மன், மான், ன் - ஆண்பாற் பெயர் விகுதிகள்.
2. பெண்பால் பெயர் விகுதி
(1) குழையள் அள்
(2) குழையாள் ஆள்
(3) பிறள் ள்
(4) அரசி இ
அள், ஆள், ள், இ - பெண்பால் பெயர் விகுதிகள்.
3. பலர்பால் பெயர் விகுதி
(1) குழையர் அர்
(2) குழையார் ஆர்
(3) குருமார் மார்
(4) குருமார்கள் கள்
(5) பிறர் ர்
அர், ஆர், மார், கள், ர் - பலர்பால் பெயர் விகுதிகள்.
4. ஒன்றன் பால் பெயர் விகுதி
அது து
து - ஒன்றன்பால் பெயர் விகுதி
.
5. பலவின்பால் பெயர் விகுதி
(1) நல்லன அ
(2) நல்லவை வை
(3) நாடுகள் கள்
அ, வை, கள் - பலவின்பால் பெயர் விகுதிகள்.
12. ஐம்பால் வினைமுற்றுக்கள்
வினைமுற்று விகுதிகள்
1. ஆண்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தனன் அன்
(2) நடந்தான் ஆன்
2. பெண்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தனள் அள்
(2) நடந்தாள் ஆள்
3. பலர்பால்
வினைமுற்றுக்கள் விகுதி
(1) நடந்தனர் அர்
(2) நடந்தார் ஆர்
(3) செல்லுப ப
(4) பாடன்மார் மார்
4. ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தது து
(2) கூவிற்று று
(3) பொருட்டு (பொருளையுடையது) டு
5. பலவின்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தன அ (உடன்பாடு)
(2) நடவா ஆ (எதிர்மறை)
13. பகுபத உறுப்புகள்
செய், நில், உண், எடு - இவற்றுள் ஒவ்வொன்றும் பிரிக்கமுடியாத சொற்கள். எனவே பகாப் பதங்கள் எனப்படும். (பகுத்தல் - பிரித்தல்; பகா - பிரிக்க
முடியாத.)
செய்தான் = செய் + த் + ஆன்
நின்றான் = நில் + ற் + ஆன்
உண்கிறான் = உண் + கிறு + ஆன்
இவ்வாறு பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்.
பகுபதத்தில் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் உறுப்புகள் இருக்கும்.
கூனன் = கூன் + அன்
கூன் - பகுதி
அன் - விகுதி
செய்தான் = செய் + த் + ஆன்
செய் - பகுதி
த் - இடைநிலை
ஆன் - விகுதி
செய்தனன் = செய் + த் + அன் + அன்
செய் - பகுதி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி
படித்தனன் = படி + த் + த் + அன் + அன்
படி - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி
நடந்தனர் = நட + த் + த் + அன் + அர்
நட - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அர் - விகுதி
(த் - ந் ஆனது - விகாரம்)
பெற்றாள் = பெறு + ஆள்
பெற்று + ஆள்
பெற்று - பகுதிஒற்று
ஆள் - விகுதி
இரட்டித்து இறந்தகாலம் காட்டியது.
இவ்வாறு நட்டான், தொட்டான், விட்டார் என்று சொற்களையும் பிரித்துக்கொள்க.
14. முற்றெச்சம்
உண்டான் - வினைமுற்று
உண்டு (வந்தான்) - வினையெச்சம்
உண்ட (பையன்) - பெயரெச்சம்
இவற்றை நீங்கள் அறிவீர்கள். கீழ்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்: கண்ணன் கண்டனன் வந்தான். இதில் உள்ள ``கண்டனன்'' என்பது வினைமுற்று; ஆனால் இங்கே `கண்டு' என்னும் வினையெச்சப் பொருளில் வந்துள்ளது. `கண்ணன்' கண்டு வந்தான்' என்பது வாக்கியத்தின் பொருள். இவ்வாறு ஒரு வினைமுற்று வினையெச்சப் பொருளில் வருமாயின், அவ்வினைமுற்று அவ்விடத்தில் முற்றெச்சம் (முற்று-எச்சம்) எனப்படும்.
(1) இராமன் குகனைத் தழுவினன் மகிழ்ந்தான்.
(2) வீமன் நகைத்தனன் சீறினான்.
(3) தமயந்தி நளனைத் தேடினள் அலைந்தாள்.
தழுவினன், நகைத்தனன், தேடினள் - முற்றெச்சங்கள்.
எழுத்தின் வகைகள்
எழுத்துகளை முதல் எழுத்து என்றும் சார்பு எழுத்துஎன்றும் இருவகையாகப் பிரிக்கலாம். மொழிக்குமுதற்காரணமாகவும் பிற எழுத்துகள் தோன்றவும் ஒலிக்கவும்காரணமாக இருக்கும் எழுத்துகள் முதல் எழுத்துகள் எனப்படும்.முதல் எழுத்துகளைச் சார்ந்து வரக்கூடிய எழுத்துகளைச் சார்புஎழுத்துகள் என்கிறோம்.
3.1.1 முதல் எழுத்துகள்
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய்எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். சொற்களை உருவாக்கஇவையே அடிப்படையாக இருக்கின்றன. எனவே இவற்றை முதல்எழுத்துகள் என்கிறோம்.
• உயிர் எழுத்துகளும் அமைப்பு முறையும் தமிழில், அடிப்படை ஒலிகளான அ முதல் ஒள வரைஉள்ள ஒலிகளை - எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்கிறோம். இவை அமைந்துள்ள முறை கீழேகொடுக்கப்பட்டுள்ளது.
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள
இந்தப் பன்னிரண்டு எழுத்துகளும் இயல்பாகவும் எளிதாகவும்ஒலிக்கக் கூடியனவாக உள்ளன.
உயிர் எழுத்தை ஆவி எழுத்து என்றும் குறிப்பிடுவர்.ஆவி என்றால் உயிர் என்று பொருள்.
• மெய் எழுத்துகளும் அமைப்பு முறையும்உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாகஉள்ள மற்றொரு வகை எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். க், ங், ச் முதலியன மெய் எழுத்துகள் ஆகும். மெய்எழுத்துகளும் அவை வரிசையில் அமைந்துள்ள முறையும் கீழேதரப்பட்டுள்ளன.
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
இந்த எழுத்துகளை ஒலிப்பது சற்றுக் கடினம். உயிர் இல்லாமல்உடல் இயங்காது. அதுபோல இந்த எழுத்துகள் உயிர்எழுத்துகளுடன் சேர்ந்தே இயங்கும், அதனால் இவற்றை மெய்எழுத்துகள் என்று கூறுவர். மெய் என்பதும் உடம்பு என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். மெய் எழுத்துகளை ஒற்று எழுத்துகள் என்றும் கூறுவர். இந்த எழுத்துகள்புள்ளியுடன் இருப்பதால் இவற்றைப் புள்ளி எழுத்து என்றும்கூறுவர்.
உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
‘உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே’ (59)
என்னும் நன்னூல் நூற்பா இதை விளக்குகிறது.
3.1.2 சார்பு எழுத்துகள்
தமிழ் மொழியில் உயிர்எழுத்துகள் மெய் எழுத்துகள்மட்டும் அல்லாமல் வேறு சில வகை எழுத்துகளும் உள்ளன.இவை முதல் எழுத்துகளின் அடிப்படையில், அவற்றின் கூட்டாகஅமைகின்றன. அதாவது முதல் எழுத்துகளைச் சார்ந்து (துணைஎழுத்தாக) நிற்கின்றன. எனவே சார்பு எழுத்துகள் எனஅழைக்கப் படுகின்றன. உயிர்மெய், ஆய்தம் முதலிய எழுத்துகள்சார்பு எழுத்துகள் ஆகும்.
• உயிர்மெய்
உயிர் (ஒலியும்) எழுத்துகளும் மெய் (ஒலியும்) எழுத்துகளும்சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் உண்டாகின்றன. உயிர் ஒலியேஎல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதால் அதற்கு முதல் இடம்தந்து, ‘உயிர்மெய்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
மெய் உயிர் உயிர்மெய்(வரி வடிவம்)
க் + இ = கி
ச் + உ = சு
ப் + ஊ = பூ
வ் + ஆ = வா
த் + ஏ = தே
இந்த எழுத்துகள் எல்லாம் உயிர் எழுத்துகளும் மெய்எழுத்துகளும் சேர்ந்து உருவாகிய எழுத்துகள் என்பதால்,இவற்றை உயிர்மெய் எழுத்துகள் என்று அழைக்கிறோம். மேலே காட்டிய எழுத்துகளை நீங்களும் ஒலித்துப் பாருங்கள்,இந்த எழுத்துகளில் மெய் எழுத்தின் ஓசையும், உயிர் எழுத்தின்ஓசையும் இணைந்து இருப்பதைக் காணலாம்,
• ஆய்தம்
தமிழ் மொழியில் ஃ என்று ஓர் எழுத்து உள்ளது, இதைஆய்த எழுத்து என்று சுட்டுவர்.
இது சொற்களில் பின்வருமாறு வரும்.
அஃது, எஃகு
ஆய்த எழுத்து ஃ என்ற முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் மூன்று புள்ளிகள் இருப்பதால் இதை முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்றும் அழைப்பர். ஆய்த எழுத்து உயிர் எழுத்தோடும் மெய் எழுத்தோடும் ஒன்றாமல் இருப்பதால் இதைத் தனிநிலை என்றும் சுட்டுவர். ஆய்த எழுத்துகள் சொல்லில் வரும்போது, அதற்கு முன்னும் பின்னும் வேறு எழுத்துகள் வருகின்றன. ஆய்த எழுத்தும் மற்றஎழுத்துகளைச் சார்ந்தே வருகிறது. எனவே இதுவும் சார்பு எழுத்து எனப்படுகிறது. தமிழில் வேறு சில சார்பு எழுத்துகளும் உள்ளன. அவை பின் வரும் பாடங்களில் விளக்கப்படும்.
3.1.3 உயிர் எழுத்தின் வகைகள்
உயிர் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை,
1. குறில்
2. நெடில்
• குறில்
பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் குறுகி ஒலிக்கின்றன. அவ்வாறு குறுகி ஒலிக்கும் எழுத்துகளைக் குறில் எழுத்துகள் என்று குறிப்பிடுவர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை நோக்குங்கள்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
இவற்றில் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறைந்த அளவுநேரமே ஒலிப்பதால் இவற்றைக் குற்றெழுத்து அல்லது குறில் எழுத்து என்று குறிப்பர்.
‘அ, இ, உ, எ, ஒ, குறில் ஐந்தே’ (64)
என்னும் நன்னூல் நூற்பா, அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் குறில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது.
• நெடில்
பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் நீண்டு ஒலிக்கின்றன. அவ்வாறு நீண்டு ஒலிக்கும் எழுத்துகளை நெடில்எழுத்துகள் என்று குறிப்பிடுவர்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நீண்டு ஒலிப்பதால் நெட்டெழுத்து அல்லது நெடில் எழுத்துகள் என்று குறிக்கப்படும்.
‘ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள நெடில்’ (65)
என்னும் நன்னூல் நூற்பா ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது.
3.1.4 மெய் எழுத்தின் வகைகள்
உயிர் எழுத்துகளில் இவ்வாறு குறில், நெடில் வேறுபாடுஉண்டு, ஆனால் மெய் எழுத்துகளில் இவ்வாறான குறில், நெடில்வேறுபாடு இல்லை. உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்துஉண்டாகும் உயிர்மெய் எழுத்துகளிலும் இதே போல குறில்நெடில் வேறுபாடு உண்டு.
மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். அவை,
1. வல்லினம்
2. மெல்லினம்
3. இடையினம்
• வல்லினம்
மெய் எழுத்துகளில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துகளை வல்லினம் என்று கூறுவர். க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மையாக ஒலிப்பதால் வல்லின எழுத்துகள் ஆகும்.
வல்லினம் க, ச, ட, த, ப, ற என ஆறே (68)
என்னும் நன்னூல் நூற்பா வல்லின எழுத்துகள் எவை என்றுகுறிக்கிறது.
• மெல்லினம்
மெய் எழுத்துகளில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துகளை மெல்லினம் என்று கூறுவர். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு மெய் எழுத்துகளும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் ஆகும்.
மெல்லினம் ங, ஞ, ண, ந. ம, ன என ஆறே (69)
என்னும் நன்னூல் நூற்பா மெல்லின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.
• இடையினம்
மெய் எழுத்துகளில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துகளை இடையினம் என்று கூறுவர். ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும்.
இடையினம் ய, ர, ல, வ, ழ, ள என ஆறே (70)
என்னும் நன்னூல் நூற்பா இடையின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.
3.1.5 இன எழுத்துகள்
பிறப்பு, ஒலிப்பு முதலியவற்றில் ஒத்து இருக்கும் எழுத்துகளை இன எழுத்துகள் என்று கூறுவர். உயிர் எழுத்துகள் குறில். நெடில் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. குறில்எழுத்துகள் ஐந்தும் நெடில் எழுத்துகள் ஏழும் உள்ளன. இவற்றின் ஒத்த தன்மையைக் கொண்டு இன எழுத்துகளாகப் பிரிப்பர்.
அ ஆ
இ ஈ
உ ஊ
எ ஏ
ஐ
ஒ ஓ
ஒள
நெடில் எழுத்தாக; உள்ள ஐ, ஒள ஆகியவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் இல்லை.
மெய் எழுத்துகளில் ஆறு மெல்லின எழுத்துகளும் ஆறுவல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துகளாக உள்ளன. மெய்எழுத்துகளில் இன எழுத்துகள் பின்வருமாறு அமையும்.
க் ங் தங்கம்
ச் ஞ் பஞ்சு
ட் ண் நண்டு
த் ந் பந்து
ப் ம் பாம்பு
ற் ன் கன்று
இந்தச் சொற்களில் உள்ள மெய் எழுத்துகளைக் கவனியுங்கள், இவற்றில் ங்க, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று என்று வந்துள்ளதைக் கவனியுங்கள். இந்தச் சொற்களில் மெய்எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் அடுத்தடுத்து வந்துள்ளன. முன்பு உயிர் எழுத்துகளில் இன எழுத்துகளைப் பார்த்தோம். இவை மெய் எழுத்துகளில் இன எழுத்துகள் ஆகும். க, ச, ட, த, ப, ற என்ற வல்லின எழுத்துகள் ஆறும் தனியே ஒலிக்கும் போது வன்மையாக ஒலிக்கும். மேலேகாட்டியபடி சொற்களில் மெல்லின எழுத்துகளை ஒட்டிவரும்போது இவை மென்மையாகவே ஒலிக்கும். வல்லின எழுத்தை ஒட்டி வரும்போது வன்மையாக ஒலிக்கும்.
சங்கு பக்கம்
நஞ்சு நச்சு
பண்டம் பட்டம்
மந்தி கத்தி
பம்பரம் கப்பல்
இன்று நேற்று
மேலே காட்டப் பட்டுள்ள சொற்களில் இடப்பக்கம் உள்ளவை மென்மையாகவும் வலப்பக்கம் உள்ளவை வன்மையாகவும் ஒலிக்கும் என்பதை ஒலித்துப் பாருங்கள்.
3.1.6 சுட்டு எழுத்துகள்
ஒரு பொருளைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்குப் பயன்படும் எழுத்துகள் சில உள்ளன. பின்வருவனவற்றைப் படியுங்கள்:
அவ்வீடு, இப்புத்தகம், அம்மரம், இப்பூனை
மேலே, வீடு, புத்தகம், மரம், பூனை முதலிய சொற்களுக்குமுன் அ, இ ஆகிய எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தஎழுத்துகள் பொருள்களைச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன.ஒரு பொருளின் பெயருக்குமுன் இந்த எழுத்துகள் வந்து, அந்தப்பொருளைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன. ஒரு தென்னந்தோப்பில் நூற்றுக்கணக்கான தென்னைமரங்கள் நிற்கும். மரங்கள் என்று சொன்னால் அது அந்தத் தோப்பில் உள்ள மரங்களைக் குறிக்கும். மரம் என்றால் அது தோப்பில் உள்ள ஏதோ ஒரு மரத்தைக் குறிக்கும். அம்மரம் என்று சொன்னால் அத்தோப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட மரம் சுட்டிக் காட்டப்படுவதை நாம் உணரமுடியும். இவ்வாறு சுட்டிக்காட்ட உதவும் எழுத்து, சுட்டு எழுத்து எனப்படும். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள்ஆகும். உ என்ற சுட்டு எழுத்து, தற்காலத்தில் பயன்பாட்டில் இல்லை.
உதுக்காண், உவன், உங்கே
என்ற இடங்களில் உகரம் சுட்டு எழுத்தாக வந்துள்ளதைக் காணலாம். இக்காலத்தில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டும் உகரச் சுட்டைப் பயன்படுத்துகின்றனர். மற்றபடி இக்காலத் தமிழ் மொழியில் உகரச் சுட்டு இடம்பெறுவதில்லை.
அ, இ, உம் முதல் தனிவரின் சுட்டே (66)
என்னும் நன்னூல் நூற்பா சுட்டு எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.
• சேய்மைச் சுட்டு
அவ்வீடு, அக்கரை, அம்மரம், அக்குளம்
மேலே காட்டப்பட்ட எடுத்துக் காட்டுகளில், அவ்வீடு, அம்மரம் முதலியன தொலைவில் உள்ள பொருள்களைச் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, இதனைச் சேய்மைச் சுட்டு என்கிறோம். சேய்மை என்பது தொலைவு என்று பொருள்படும்.
• அண்மைச் சுட்டு
இப்பூனை, இப்புத்தகம், இம்மாடு, இக்கட்டில்
இப்புத்தகம், இப்பூனை முதலியன அருகில் உள்ள பொருள்களைச் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவற்றை அண்மைச் சுட்டு என்கிறோம். அண்மை என்பது அருகில் என்று பொருள்படும்.
• அகச்சுட்டு
அவன், இவள், அது, இது
இந்தச் சொற்களில் அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டுப்பொருளை உணர்த்தி வருகின்றன. இவை சொல்லுக்கு உள்ளேயேஇருக்கின்றன. அவன் என்பதில் ’அ’ என்ற சுட்டு எழுத்தைநீக்கிவிட்டால் ‘வன்’ தனியே நின்று பொருள் இல்லாமல் போய்விடும். எனவே இவற்றைச் சொல்லில் இருந்து தனியேபிரித்துக் காணமுடியாது. ஒரு சொல்லுக்கு உள்ளே இருந்து, சுட்டுப் பொருளையும் உணர்த்துவதால், இவற்றை அகச் சுட்டு என்று கூறுவர். அகம் என்பது உள்ளே என்று பொருள்படும்.
• புறச்சுட்டு
அவ்வீடு, இம்மனிதன், அக்குளம், இம்மாடு
மேலே காட்டியவற்றில் அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் வீடு, மனிதன் முதலியவற்றுடன் கூடி. ஒரே சொல் போன்று காட்சி தருகின்றன. எனினும் இவற்றைத் தனியே பிரிக்க முடியும். எடுத்துக்காட்டாக மேலே உள்ள சொற்களில் சுட்டு எழுத்துகளை நீக்கிப் பார்க்கலாம்.
அ + வீடு
இ + மனிதன்
அ + குளம்
இ + மாடு
இவற்றில் சுட்டு எழுத்தை நீக்கிய பின் வீடு, மனிதன், குளம், மாடு ஆகிய சொற்கள் தனித்து நிற்கின்றன. இந்த எடுத்துக்காட்டுகளில் சொல்லுக்கு வெளியே இருந்து சுட்டு எழுத்துகள் சுட்டுப் பொருளை உணர்த்துவதால் இவை புறச்சுட்டு எனப்படுகின்றன, புறம் என்பது வெளியே என்று பொருள்படும்.
• சுட்டுத் திரிபு
அந்த மரம், இந்த வீடு, அந்த மாடு, இந்த ஆடு
மேலே காட்டிய எடுத்துக் காட்டுகளில் மரம், வீடுஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் அந்த, இந்த ஆகியவைசொல்லுக்கு வெளியே தனியே நின்றுள்ளன. இவைஅடிப்படையில் அ, இ என்ற சுட்டு எழுத்துகளே. ஆனால் இங்கு அந்த, இந்த என்று மாறியுள்ளன. இவை தம் வடிவத்திலிருத்து திரிந்து, பொருளைச் சுட்டுகின்றன. எனவே இவற்றைச் சுட்டுத்திரிபு என்று கூறுவர்.
3.1.7 வினா எழுத்துகள்
அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டுப் பொருள் தருவதுபோலவே, சில எழுத்துகள் வினாப் பொருளைத் தருகின்றன.கீழே உள்ளவற்றைக் கவனிக்க. வினா என்பதும் கேள்வி என்பதும் ஒரே பொருள் தருவன.
யார்? எங்கு? நீயா?
இந்தச் சொற்கள் வினாப் பொருள் தருவதை உணரலாம். தமிழில் ஆ, எ. ஏ. ஓ, யா ஆகிய எழுத்துகள், வினாப் பொருள்தரும் எழுத்துகள் ஆகும், இவை வினாப் பொருள் தருவதால்வினா எழுத்துகள் எனப்படுகின்றன, வினா எழுத்துகள் ஒருசொல்லைச் சார்ந்தே வினாப் பொருள் தரும். இவற்றில் எ, யா ஆகிய இரு எழுத்துகளும் ஒருசொல்லுக்கு முதலில் வந்து வினாப் பொருள் தரும்,
எப்படி? எவ்வரிசை? எம்மனிதர்? யார்? யாது?
ஆ, ஓ ஆகிய இரு எழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வந்து வினாப் பொருள் தரும்.
நானா சொன்னேன்? - ஆ
அவனா தருவான்? - ஆ
நானோ கள்வன்? - ஓ
அவர் வருவாரோ? - ஓ
ஏ என்னும் எழுத்து, சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும்வந்து வினாப் பொருள் தரும்.
ஏன், ஏது யாரே அனுபவிப்பார்
எ, யா, முதலும் ஆ, ஓ. ஈற்றும் ஏ, இருவழியும் வினா ஆகும்மே (67)
என்னும் நன்னூல் நூற்பா வினா எழுத்துகள் எவை என்றுகுறிப்பதுடன் சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகளையும் இறுதியில் வரும் வினா எழுத்துகளையும் முதலிலும் இறுதியிலும்வரும் வினா எழுத்தையும் குறிப்பிடுகிறது.
• அகவினா
சுட்டு எழுத்துகளைப் போலவே சொல்லுக்கு உள்ளே இருந்து வினாப் பொருளை உணர்த்துவது அகவினா எனப்படும்.
ஏன்? யார்? என்ன? எங்கு?
மேற்கண்ட சொற்களில் வினா எழுத்துகளை நீக்கிவிட்டால், அச்சொற்கள் பொருள் தர மாட்டா. ஆகவேஇவை அக வினா எனப்படுகின்றன.
• புறவினா
வினா எழுத்துகள் சொல்லுக்கு வெளியே இருந்து, வினாப்பொருளைத் தந்தால் அது புறவினா எனப்படும்.
எம்மரம்? எ+மரம்
எப்படி? எ+படி
அவளா? அவள்+ஆ
நின்றானா? நின்றான்+ஆ
தருவாளா? தருவாள்+ஆ
மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில், வினாப் பொருள் தரும் எ, ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கிவிட்டாலும் இந்தச் சொற்கள் பொருள் தரும்.
நல்ல மரமும் நச்சு மரமும்
"தோயும் திரைகள் அலைப்பத்
தோடார் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சம்
வெள்ளை யன்னம் காணாய்"
என்று தான் பெற்ற இன்பத்தை இனிது எடுத்துரைத்தான். அப்பொய்கையில் இலங்கிய அழகிய மலர்கள் முகமலர்ந்து இருவரையும் அருகே அழைப்பனபோல் அசைந்தன. அவ்வாவியின் தன்மையும் செம்மையும் கண்ட இருவரும், தாய் முகம் கண்ட சேய் போல் மனம் களித்து அந்நன்னீரைப் பருகி மகிழ்ந்தார்கள். அருந்தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மை போல் அடுக்கடுக்காக அலைகள் கரையருகே வந்து சேர்ந்தன. தாகம் தணிந்து, மனமும் மெய்யும் குளிந்த பின்னர், இருவரும் அக்குளத்தின் ஈரக்கரையில் இனிதமரந்து,அங்க்கு வீசிய இளங்ககாற்றை நுகர்ந்து இன்புற்றார்கள்;அப்போது அவ்வாவியின் அருகே கொத்துக் கொத்தாகப் பொன்நிறக் கனிகளைத் தாங்கி, குளிர் நிழல் விரித்து நின்ற மரமொன்றைக் கண்டார்கள். அதன் நிழலிலே தங்கி இளைப்பாற எண்ணி, இருவரும் அங்குச் சென்றார்கள்.
கதிரவன் வெம்மையைத் தடுப்பதற்கு ஓங்கிய பாசிலைப் பந்தர் வேய்ந்தாற் போன்று விளங்கிய மரத்தின் நிழலில் இருவரும் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்கள். சில நாழிகை சென்ற பின்னர், தோழன் துயிலொழிந்து எழுந்தான்; எங்கும் பசுமை நிறமும், பறவையின் ஒலியும், பழத்தின் மணமும் நிறைந்திருப்பினும், பசியின் கொடுமையைப் பொறுக்கலாற்றாது வருந்தினான். கற்பகத் தருவெனக் கவின்பெற விளங்கிய மரக் கொம்புகளை நயந்து நோக்கினான்; அவற்றில் பொன்னிறமான பழங்கள் கொத்துக் கொத்தாய் எம்மருங்கும் இலங்கக் கண்டான்; அப்பொழுது அம்மரக் கிளைகளின் வழியாக மேலே சென்று, இருவரது அரும் பசியையும் தீர்ப்பதற்குப் போதிய கனிகளைக் கொய்து வந்து, துணைவனைத் துயிலினின்றும் எழுப்பினான்.கனிகளின் நிறத்தைக் கண்டும் நன் மணத்தை நுகர்ந்தும், தீஞ்சுவையைத் துய்த்தும் இருவரும் இன்புற்றார்கள். பின்னும் சிறிதுபொழுது அம்மரதின் நிழலில் அமர்ந்திருக்கையில், அரசகுமாரனது தலை நோய் மிகுந்தது. அதனைத் தீர்க்கும் வகையறியாது தோழன் திகைத்து, 'எவரேனும் இவ்வழி வாராரோ' என்று எதிர் நோக்கி இருந்தான்.
இவ்வாறு இருக்கையில் அவ்விடத்தை நோக்கி ஒரு முதியவன் வந்து சேர்ந்தான். "தலைக் குத்துத் தீர்க்கும் மருந்து தங்களிடம் உண்டோ" என்று தோழன் அவனை வினவினான். அப்பொழுது முதியோன் புன்னகை பூத்து, "கையில் வெண்ணையிருக்க நெய் தேடி அலையும் வெள்ளியரும் உண்டென்பதை இன்று நேராக அறிந்தேன்; இம்மரத்தின் பட்டையில் சிறிது செதுக்கி, அதன் சாறைத் தலையிற் பிழிந்தால் எவ்வகைத் தலைக்குத்தும் தீ ர்ந்து விடுமே" என்று சொல்லி அப்பாற் சென்றான். அதை அறிந்த தோழன் அளவிலா மகிழ்வடைந்து, அம்மரப்பட்டையின் சாற்றை மன்னன் மைந்தனது தலையிற் பிழிந்தான்; சிறிது நேரத்தில் அரசிளங் குமரனது தலைக்குத்து அறவே ஒழிந்தது.
அந்நிலையில், தோழன் தலைநோய் தீர்ந்த இளவரசனை நோக்கி "ஐயனே! நாம் இருவரும் கானகம் சென்றது முதல் இதுவரையும் நிகழ்ந்த செயல்களைப் பார்த்தாயா?நாம் பசியாலும் வெயிலாலும் நலிந்து, மெய் தளர்ந்து, வருந்தும் நிலையில் இப்பொய்கை நம்மை அன்புடன் அழைத்து இன்முகம் காட்டித் தாகம் தணித்துத் தளர்வை மாற்றியது. அப்பால்,இம்மரம் நாம் தங்கியிருக்கக் குளிர்நிழல் தந்து, பசியாறப் பழங்கள் அளித்துத் தலைநோய் தீர்க்கவும் தனி மருந்தாய் அமைந்தது. இத்தன்மையை நோக்குங்க்கால், நல்லார் கைப்பட்ட செல்வத்தின் தன்மை நங்கு விளங்குமன்றோ? வறுமையால் வருந்தி வந்தவரை இனிய முகத்துடன் ஏற்று, அவரது குறையை நிறை செய்வதே அறிவுடைய செல்வர் செயலாகும். ஆற்று வழியாகவும் ஊற்று வழியாகவும் நன்னீரைத் தன்அகத்தே நிரப்பிக்கொள்ளும் இப்பொய்கைபோல், அறிவுடையார், நல்வழிகளால் ஈட்டிய பெரும் பொருள் நிறைந்த பண்ணைகளாய் விளங்குவார்கள். நீர் நிறைந்த பொய்கை எப்பொழுதும் தண்மை வாய்ந்து விளங்குதல்போல, அறிவுடைய செல்வரும் ஈரம் வாய்ந்த நெஞ்சினராய் இலங்குவார்கள்.தாகத்தால் வருந்தி வருவோர்க்குத் தடையின்றி நீர் வழங்கும் தடாகம் போல். கல்வியும் செல்வமும் பூத்த மேலோர் வறிஞர்க்கு வரையாது. பொருள் வழங்கும் வள்ளல்களாய் விளங்குவார்கள். இன்னும், தமக்கென வாழாது பிறர்க்குரியாளராய் வாழும் பெரியார்பால் அமைந்த செல்வம். ஊருணியின் நீர்போல ஊரார்க்கே முழுவதும் பயன்படுவதாகும். இதனாலேயே,
"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"
என்று திருவள்ளுவர் அருளிப்போந்தார். இன்னும் பழுதறு பழங்களைத் தாங்கி நிற்கும் இப்பயம்மரம் தன் இனிய பழங்களால் பசிநோய் அகற்றி, குளிர் நிழலால் களைப்பை மாற்றி, பட்டையால் பிணியைப் போக்கி, பல வகையாகப் பயன்படுதல்போல, அறிஞரிடம் அமைந்த செல்வம் வறியார்க்குப் பலவகையிற் பயன்படுதலாலேயே,
"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"
"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்"
என்னும் நாயனார் பொருளுரை எழுந்தது. ஆகவே, "தண்மை வாய்ந்த தடாகம் போலவும், பழங்கள் நிறைந்த பயன்மரம் போலவும் வாழ்வதே பண்புடைமையாகும்" என்று இனிதாக எடுத்துரைத்தான். அரசிளங் குமரனும் அதன் உண்மையை அறிந்து தோழன் கூறிய பொருளுரையைப் பொன்போற் போற்றினான்.
அப்பால், இருவரும் தமது ஊரை நோக்கிச் சென்றனர்; செல்லும் வழியில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. அதன் நடுவே போகும்போது இருவரும் முன் கண்டறியாத ஒரு மரத்தினைக் கண்டு வியந்து நின்றார்கள். அம்மரம் சுவையாகிக் கொம்பாகிக் காட்டு மரம்போல் ஓங்கி வளர்ந்திருந்தது. தன் கொம்புகளிலும் கிளைகளிலும் கூரிய முள் நிறைந்திருந்தது.இலைகளும், தழைகளும் இல்லாமல் பட்ட மரம்போல் நின்ற அதன் கிளைகளில் செவ்வையாய்ப் பழுத்த பழங்கள் கொத்துக் கொத்தாய் அமைந்து கண்களைக் கவர்ந்தன. அம்மரத்தைக் கண்டு இருவரும் வியந்து நிற்கையில் அவ்வழியாக ஓர் இளைஞன் வந்து சேர்ந்தான்.
அவன், மரத்தருகே நின்ற இருவரையும் இனிது நோக்கி, "ஐயா! நீங்கள் இருவரும் அயலூரார் என்பதை அறிந்தேன். ஏனெனில், இவ்வூரார் எவரும் இப்பாழான பழுமரத்தைக் கண்ணெடுத்தும் பாரார்கள். இம்மரத்தில் எந்நாளும் இலைகளும், தழைகளும் இல்லாமையால் விலங்குகளும் இதனடியில் நில்லாமல் விலகிப் போகும்; கண்களைக் கவரும் வனப்பு வாய்ந்த இக்கனிகளும் நச்சுக் கனிகளாய் இருத்தலின் , உண்டாரைக் கொன்றுவிடும். இம்மரத்தின் கொம்புகளை விறகாய் வெட்டி எரிப்பதற்கும் இதனிடம் அமைந்த முள் இடையூறாயிருக்கின்றது. இப்பாழ் மரம் கடுங்காற்றில் அகப்பட்டு முரிந்துவேரற்று விழவேண்டுமென்று இவ்வூரார் இறைவனை நாளும் வழிபடுகின்றனர். இம்மரம் என்று விழுமோ, அன்றே இவ்வூரார்க்கு நன்றாகும்" என்று அதன் தன்மையை விரிவாகக் கூறி முடித்தான்.
அதைக் கேட்ட அரசிளங்குமரன் முன்னே தங்கி இளைப்பாறிய மரத்தின் நலத்தையும் , பின்னே கண்ட மரத்தின் கொடுமையையும் ஒப்புநோக்கி, நச்சு மரத்தில் அமைந்த நன்னிரக் கனிகள், பேதையர் கைப்பட்ட செல்வம் போல் பிறர்க்கு இடர் விளைப்பனவாகும் என்று எண்ணி வருந்தினான்.
"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று"
என்னும் பொய்யாமொழியின் பொருளைத்தெளிந்தான்.
இத்தகைய செல்வம் நிறைந்த பேதையர் நிலத்துக்கு சுமையாகவும் , உலகத்திற்கு உற்ற வசையாகவும் அமைந்திருத்தலால், அன்னார் அழிந்து ஒழிவதே நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். அறிவுடைய செல்வரை உலகம் போற்றும்; அறிவற்ற செல்வரை உலகம் தூற்றும். அறிவுடைய செல்வனது ஆக்கம் கண்டு உலகம் களிக்கும்; அறிவிலா செல்வனது அழிவைக் கண்டு உலகம் மகிழும். அறிவுடைய செல்வன் தன் பொருளைத் தக்கவாறு பயன்படுத்தி, இம்மையிற் புகழும், மறுமையில் இன்பமும் எய்துவான். அறிவிலா செல்வன் பயன்பட வாழும் பண்பறியாப் பேதையனாய்
இம்மையிற் பழியும் மறுமையில் துன்பமும் எய்துவான்."நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு"
என்பது என்றும் பொய்யாமொழியேயாகும்.
தெய்வப்புலவர் - திருவள்ளுவர்

திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி.
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.
இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.
தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி கடல் முனையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது தவிர சென்னையில் வள்ளுவர் கோட்டம் ஒன்றும் அமைத்துள்ளது.
தமிழ்ப் புலவி - ஔவையார்

இவர் தமிழறிவுடன் பிறந்தவர் என்பர். பெற்றாருண்டி மறந்தவர். பாணரகத்தில் வளர்ந்தவர்.சிவபரத்துவந் தெளிந்தவர். வரகவித்துவம் அமைந்தவர். இலௌகிகம், வைதிகம் இரண்டுந் தெரிந்தவர். உள்ளம், உண்மை, மொழி எனும் மூன்றும் சிறந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் அறிந்தவர். தமிழ்நாடெங்குந் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் பலநாள் இருந்தவர்.
பலர்மீதுங் கவிபாடிப் பரிசு பெற்றவர். பரிசு கொடுத்தவர் சிறியராயினும், வறியராயினும் அவரைப் பெரியராக மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பராமுகஞ் செய்தாரையும், பாடலருமை அறிய மூடரையும் வெறுத்துப் பாடியவர்.
டாக்டர் மு. வரதராசன் (1912 - 1974)

மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் வேலம் என்னும் சிறிய கிராமத்தில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும் வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார். எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழின் மீதிருந்த பற்றால் 1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காக திருப்பனந்தாள் மடம் ரூ.1000 பரிசளித்தது.1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார்.
இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.1939 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944 இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.1948 இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.1939 இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945 இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.பின்னர் 1971 இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார்.
1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், , கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். பெர்னாட்ஷா, திரு.வி.க., காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார்.இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது.1944ம் ஆண்டு மு.வ. எழுதிய "செந்தாமரை" நாவலை வெளியிட யாரும் முன்வராததால், அந்நாவலை அவரே வெளியிட்டார். மு.வ. எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மு.வ.வின் அகல்விளக்கு எனும் நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன.
டாக்டர் மு.வரதராஜன் அக்டோபர் 10, 1974ல் தனது 62வது அகவையில் சென்னையில் இயற்கை எய்தினார்.
